தமிழக- கேரளா எல்லையில் ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செங்கோட்டை: தமிழக- கேரளா எல்லையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் ஜீப்பை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடையநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தமிழக- கேரளா எல்லைப் பகுதியான புளியரை சவுக்கை இசக்கியம்மன் கோவில் பகுதியில் பறக்கும் படை அலுவலர் குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தென்காசியில் இருந்து கேரளா நோக்கி "ரயில்வே பணி" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஜீப் சென்றது.

அந்த ஜீப்பை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை பணியில் ஒரு பிரிவான எடமண் --புனலூர் இடையே ரயில்பாதை பணியினை மேற்கொண்டு வரும் ஆந்திராவின் "ரயில் ஒன் புராஜெக்ட்" நிறுவன இயக்குனர் மல்லிகா அர்ஜுனராவ் அந்த ஜீப்பில் இருந்தார். அவர் வைத்திருந்த பையில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தென்காசி வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்ட ரூ.8 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் செங்கோட்டை தாசில்தாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் பணத்தையும், ஜீப்பையும் பறிமுதல் செய்து செங்கோட்டை தாலுகா அலுவலகம் கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்த பகுதியில் கடந்த வாரம் ரூ16 லட்சம் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications