பிரசாரத்தின்போது 3 வண்டிக்கு மேல் போகக் கூடாது... தேர்தல் ஆணையம் கிடுக்கிப் பிடி!
நெல்லை: தேர்தல் பிரசார சமயத்தில் 3 வாகனங்களுக்கு மேல் போகக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்கூடுதல் செக் போஸ்ட்டுகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தலில் வாகனம் பயன்படுத்துவது தொடர்பாக ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
தேர்தல் பணியின் போதும், வாக்கு பதிவு அன்றும் வாகனங்களை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை முழுமையாக மதிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கலின் போது தேர்தலை நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் தூரத்திற்குள் மூன்று வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

முதல் நாள்
மாவட்ட நிர்வாகம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முடிவடையும் நாள் முதல் அனைத்து வாகனங்களையும் சிறப்பு தணிக்கை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.

மறக்காம ஸ்டிக்கர் ஒட்டிருங்கப்பா
தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கி முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும்.

ஜெராக்ஸ் எடுக்கப்படாது!
அந்த ஆணையை நகல் எடுத்த பயன்படுத்த கூடாது. வாகன அனுமதி ஆணையில் வாகன எண், வேட்பாளர் பெயர் ஆகியவை இருக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முடியும் வரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் கார்கள், வாகனங்கள் மூன்று மேல் ஓரே சமயத்தில் செல்ல கூடாது.

அமைச்சரே வந்தாலும் கூட
அமைச்சர் வருகையின் போது கூட வாகனங்கள் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் பிரித்து பிரித்து தான் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செக்போஸ்டுகள்
இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தலை முன்னிட்டு கூடுதலாக செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும் என நெல்லை சரக டிஐஜி தினகரன் தெரிவித்தார்.

அதிரடி இடமாற்றம்
நெல்லை டிஐஜியாக இருந்த அன்பு சென்னை இணை கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை இணை கமிஷனராக இருந்த தினகரன் நெல்லைக்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டார். முறைப்படி அவர் நெல்லை வந்து பொறுப்பேற்றார்.

கூடுதல் கவனம்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டம் ஓழுங்கை காப்பாற்ற தனிகவனம் செலுத்தப்படும். சமூக விரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.

அச்சமில்லாமல் வாக்களிக்கலாம்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதியில் ஏற்படும் ஜாதி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தேர்தல் கமிஷன் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம்.

மெத்தனமாக இருந்தால் நடவடிக்கை
மூன்று மாவட்டங்களிலும் நிரந்தர செக்போஸ்ட் தவிர கூடுதலாக செக்போஸ்ட் அமைத்து வாகன தணிக்கை கடுமையாக்கப்படும். 3 மாவட்டங்களிலும் துப்பு துலங்காத கொலை வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்படும். தொடர்ந்து நடக்கும் கொலை பின்னனி, இதை தடுக்காமல் மெத்தனமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்க 5 போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகள்
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் கருணாகரன் திறந்து வைத்து பேசுகையில், சட்டசபை தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 0462-2501172, 251144, 251175, 2501176, 2501179 ஆகிய ஐந்து தரை வழி தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் செயல்பட தொடங்கியுள்ளனர். இதுவரை பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தவறான வகையில் பணம் நடமாட்டம் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.

சுவர் விளம்பரம் அகற்றம்
சுவர் விளம்பரங்களை அகற்ற நெல்லை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதேனும் விளம்ர பலகைகள் இருந்தாலும் அகற்றப்படும். இந்த தேர்தல் கட்டுபாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். சோதனை சாவடிகள் அனைத்தும் இயங்க தொடங்கியுள்ளது. அங்கு வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. வாகனங்களில் சட்டவிரோதமாக பணம், இதர பொருட்க்ள் அனுமதியின்றி கொண்டு சென்றால் கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications