அதிர வைக்கும் பல லட்சம் போலி வாக்காளர்கள்... நீக்க வருகிறது 2 தேர்தல் ஆணைய குழுக்கள்
சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டறிந்து நீக்குவதற்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தின் 2 குழுக்கள் தமிழகம் வருகை தர உள்ளது.
தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 40 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை உறுதி செய்து ஊடகங்கள் ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டன.
திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று இது தொடர்பான ஆதாரங்களையும் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் இந்த ஆதாரங்கள் வழங்கப்பட்டன.
இதனடிப்படையில் சென்னையில் மட்டும் 1 லட்சத்து 85 ஆயிரம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல லட்சம் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து ஆதாரங்களைத் திரட்டுவதில் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் உள்ளன.
இந்நிலையில்தான் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காகவே தலைமை தேர்தல் ஆணையம் 2 குழுக்களை தமிழகத்துக்கு அனுப்ப உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.