மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 23.64 லட்சம் கடன்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி, திருத்துறைப்பூண்டியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் விநியோகம் செய்ய வைத்திருந்த ரூ. 23.64 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றி அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் தனியாருக்கு சொந்தமான டிரஸ்ட் அலுவலகம் உள்ளது. இங்கு தேர்தல் விதிமுறைகளை மீறி மகளிர் குழுவினருக்கு பணம் வினியோகிப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி சிவராசன் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு இருந்த சிலர் பெண்களுக்கு பணம் வினியோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சோதனை நடத்தி ரூ.5 லட்சத்து 600 மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக துணை ஆட்சியர் கோபாலசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் தனியார் டிரஸ்ட் மூலம் மகளிர் சுய உதவிகுழுவினருக்கு வழங்கும் சுழல்நிதி தான் என தெரிய வந்தது. இருப்பினும் தேர்தலை குறி வைத்து இந்த பணம் வழங்கப்பட்டதா, என்பது குறித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாசில்தார் சந்திரனிடம் ஓப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தாசில்தார் தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் விநியோகம் செய்வதற்காக ரூ. 18.64 லட்சம் ரொக்கத்தை தனியார் வங்கியில் இருந்து எடுத்து வந்து அலுவலகத்தில் வைத்துள்ளதாக தேர்தல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை தேர்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.