மன்னார்குடி கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பு- எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராகும் வாய்ப்பு?
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டால் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டால் மன்னார்குடி கோஷ்டியில் யாரும் முதல்வராக கூடாது என அதிமுகவில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தங்களுக்கு விசுவாசமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மன்னார்குடி கோஷ்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா தற்போது முதல்வர் நாற்காலியில் அமர தயாராக இருக்கிறார். சசிகலா இன்று முதல்வர் பதவியேற்க கூடும் என கூறப்பட்டது. ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகையை ரத்து செய்ததால் ஏமாற்றத்தில் இருக்கிறது சசிகலா கோஷ்டி.
சசிக்கு எதிர்ப்பு
இதனிடையே ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒருவாரத்தில் உச்சநீதிமன்றம் ஒருவாரத்தில் தீர்ப்பளிக்க இருக்கிறது. இதனால் இந்த தீர்ப்புக்கு பின்னரே சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
மன்னார்குடி கோஷ்டி
இந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக இருந்தால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும். இதனால் சசிகலாவுக்கு பதில் யாரை முதல்வராக்குவது என்பது குறித்து மன்னார்குடி கோஷ்டி படுதீவிரமாக ஆலோசனையில் இருந்து வருகிறது. சசிகலா கணவர் நடராஜன், அக்காள் மகள் டிடிவி தினகரன், தம்பி திவாகரன் ஆகியோரது பெயர்கள் அடுத்த முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது.
அடுத்த முதல்வர்
ஆனால் நடராஜன், தினகரன் மீதான ஃபெரா, அன்னியசெலாவணி மோசடி வழக்குகளில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் இருவரும் முதல்வராக முடியாது. ஆகையால் மன்னார்குடி திவாகரன் முதல்வராக 50% வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
இதனிடையே சசிகலாவை தவிர மன்னார்குடி கோஷ்டியில் யாரும் முதல்வராக கூடாது என அதிமுகவில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதையடுத்து தங்களுக்கு விசுவாசமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கலாம் என மன்னார்குடி கோஷ்டி ஆலோசித்து வருவதாக போயஸ் கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.