அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? - ஆக.28ல் முக்கிய முடிவு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28ஆம்தேதி அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: அணிகள் இணைப்பு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். கூட்டம் குறித்து போன் மூலம் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
அதேபோல், விரைவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏக்களின்
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த உடனே சசிகலா நீக்கம் பற்றி பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்கியுள்ளனர். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினால், எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எச்சரிக்கை.

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்
இந்த மிரட்டலுக்கு பயப்படாமல், விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட முதல்வர் எடப்பாடி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாகவே ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று எம்பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கையெழுத்து வேட்டை
தற்போது, அதிமுக பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதிமுக கட்சியின் தற்போதைய தலைமைக்கு கடிதம் எழுதினால் பொதுக்குழுவை கூட்டலாம் என்ற சட்டவிதியின்படி அதற்கான கையெழுத்து வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.

ஒப்புதல்
பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பே, அதிமுகவை வழிகாட்டுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் பெறப்படும். இணைப்பு விழாவில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள்.

பொதுக்குழு எப்போது?
செப்டம்பர் 10ம் தேதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட்டப்படலாம் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

சசிகலா பதவி நீக்கம்
பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாலே கட்சி மற்றும் இரட்டை இலையை முதல்வர் எடப்பாடி அணியினர் எளிதில் கைப்பற்றி விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications