கட்சி, ஆட்சியை காக்க எடப்பாடி பழனிச்சாமி சொன்ன முனிவர் கதை
கட்சியின் ஒற்றுமையை உணர்த்தும் முனிவர் கதையை சொல்லி அரியலூரில் அசத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: கட்சி, ஆட்சியின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அரியலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முனிவர் கதை சொல்லி அசத்தினார்.
கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து இருந்த ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அமாவாசை நாளில் இணைந்தன. அணிகள் இணைப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பொறுப்பேற்றார். இந்த இணைப்பு டிடிவி தினகரன் அணிக்கு பிடிக்கவில்லை. முதல்வரை மாற்றக்கோரி போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அணிகள் இணைந்த பிறகு நடைபெற்ற அரசு விழாவில் முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று பேசினர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவினர் ஒரே அணியாக நின்று கட்சி, ஆட்சியை வலுப்படுத்த வேண்டும். மக்களுக்காகவே சதாசர்வ காலமும் உழைப்பதே ஜெயலலிதா எனக்கிட்ட கட்டளையாக எண்ணிச் செயல்படுகிறேன் என்றார்.
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.
ஒரு கிராமத்துக்கு முனிவர் ஒருவர் வந்து சொற்பொழிவு ஆற்றிகொண்டிருந்தார். அப்போது, அவரைப் பார்க்க வந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆங்காங்கே பிரிந்து நின்று பார்த்தனர்.
இதைப் பார்த்த முனிவர் கிராம மக்களிடம் ஒற்றுமையில்லையே என நினைத்து சிலரைக் கூப்பிட்டு அவரவர் கைகளில் ஒரு கயிற்றை கட்டி, ஒவ்வொருவரிடமும் மூன்று கயிற்றைக் கொடுத்து உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு நாளை கட்டி விடுங்கள். அடுத்த வாரம் நாம் அனைவரும் மீண்டும் இங்கு சந்திக்கலாம் எனக் கூறினார்.
இதையடுத்து, அடுத்த வாரம் முனிவர் வந்தபோது கிராம மக்கள் அனைவரும் கைகளில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஒன்றாகத் திரண்டிருந்தனர். இதைக் கண்ட முனிவருக்குச் சந்தோஷம் ஏற்பட்டது. அதுபோல நாமும் ஒன்றிணைந்து கழகத்தையும் ஆட்சியையும் கட்டிக் காப்போம் என்று கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு மரம் காற்று கதை சொன்ன பழனிச்சாமி, பூனை, முனிவர் கதையை சொல்லி கலகலப்பூட்டினார். அரியலூரில் ஒற்றுமையை உணர்த்தும் கதையை சொல்லியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொன்ன கதை போல அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருப்பார்களா பார்க்கலாம்.