தினகரனுக்கு எதிராக எடப்பாடி கோஷ்டி பகிரங்க போர்க்கொடி- அதிகாரப்பூர்வமாக உடைந்தது சசிகலா கோஷ்டி!
தினகரனுக்கு எதிராக எடப்பாடி கோஷ்டி பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியதால் அதிமுகவின் சசிகலா கோஷ்டி அதிகாரப்பூர்வமாக உடைந்தது.
சென்னை: தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் சசிகலா கோஷ்டி இரண்டாக சிதறியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட அதிமுகவில் ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பினார்.
இதனால் அதிமுக ஓபிஎஸ், அதிமுக சசிகலா கோஷ்டி என்றானது. பின்னர் சசிகலாவும் தினகரனும் சிறைக்குப் போக அந்த கோஷ்டியே அப்படியே எடப்பாடி கோஷ்டியாக உருமாறியது.

11 எம்.எல்.ஏக்கள்
அதேநேரத்தில் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள் தனி ஆவர்த்தனம் வாசித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார் தினகரன்.

மீண்டும் அதிமுக
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவில் தொடர்ந்து இயங்குவேன் என தடாலடி காட்டினார். இதற்கு எடப்பாடி கோஷ்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

ஜெயக்குமார் தலைமையில்..
இந்நிலையில் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றார் தினகரன். இதனிடையே சென்னையில் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஒன்று கூடி இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினர்.

தினகரனை ஒதுக்கி வைக்கிறோம்
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. உறுதியாக உள்ளோம். அதிமுகவை விட்டு ஒதுங்குவதாக கூறிவிட்டார். அதைத்தான் தினகரன் செய்ய வேண்டும் என போட்டுத் தாக்கினார்.

மூன்றாக உடைந்த அதிமுக
இதனால் அதிமுகவின் சசிகலா கோஷ்டி அதிகாரப்பூர்வமாகவே இரண்டாக உடைந்துவிட்டது. அதிமுக ஓபிஎஸ் அணி, அதிமுக சசிகலா- தினகரன் கோஷ்டி, அதிமுக எடப்பாடி கோஷ்டி என பகிரங்கமாக 3 ஆக சிதறிவிட்டது அதிமுக.












Click it and Unblock the Notifications