எடப்பாடி அரசில் எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல்... குற்றம் சாட்டும் திவாகரன்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஊழல் நடைபெறுவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
ஈரோடு: மின்சாரத் துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் ஊழலற்ற ஆட்சியை நடத்த இயலவில்லை எனவும் திவகாரன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் சசிகலா குடும்பத்தினர் ஓரணியில் திரண்டு அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
தினகரன் ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்யச் சொல்கிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசில் ஊழல் நடக்கிறது என்றும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் திவாகரன் பேட்டி கொடுத்மு வருகிறார்.
ஊழலற்ற ஆட்சி
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஊழலற்ற ஆட்சியை நடத்த இயலவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர்கள் புகார்
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பற்றி 8 அமைச்சர்கள் புகார் கூறியுள்ளனர். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியே தேவை. ஆனால் அனைத்து பிரிவிலும் ஊழல் நடக்கிறது.
அரசு பணிகளுக்கு லஞ்சம்
அரசு பணி நியமனங்களுக்கு பதவியை பொறுத்து லஞ்சம் வாங்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஊழல் நடைபெறுகிறது
நூதன சுரண்டல்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். மின்சாரத் துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. தமிழக மக்களை நூதனமாக சுரண்டுகின்றனர்.
திமுக முதல் எதிரி
தங்களின் முதல் எதிரி திமுகதான் என்று கூறிய திவாகரன், திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் சில ஓப்பந்தபுள்ளிகள் வழங்கப்படுகிறது என்றும் கமிஷன் தரப்படுகிறது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.