பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காத்திருக்க வேண்டுமா எடப்பாடி பழனிச்சாமி?
தன்பக்கம் உள்ள 124 எம்.எல்.ஏக்களையும் பத்திரமாக பாதுகாப்பது என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைவலியான விஷயம். எனவே கூடிய விரைவிலேயே பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி திட்டமாக இருக்கும்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவு பலத்தை சட்டசபையில் இன்னும் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கெடு விதித்துள்ளார்.
இப்படி ஆளுநர் நேர அவகாசத்தை வழங்கியிருந்தாலும்கூட, அத்தனை நாட்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி காத்திருக்க தேவையில்லை என்பதே யதார்த்த நிலை.
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். நாளை வெள்ளிக்கிழமையே கூட அவர் சட்டசபையை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க முடியும்.
தன்பக்கம் உள்ள 124 எம்.எல்.ஏக்களையும் பத்திரமாக பாதுகாப்பது என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைவலியான விஷயம். எனவே கூடிய விரைவிலேயே பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி திட்டமாக இருக்கும். எனவே தமிழக அரசியல் கலவரங்கள் இன்னும் சில நாட்களிலேயே முடிவடைந்துவிடும் என்பது ஒரு வகையில் மக்களுக்கு நிம்மதியான விஷயமே.