கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் போனில் ஆறுதல் தெரிவித்த முதல்வர்
கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் போனில் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் போனில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றிருந்தார். நேற்று இருவரும் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.
இன்று காலை மகனை அழைத்து கொண்டு எர்ணாகுளத்தில் சம்மணம் என்ற இடத்தில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் விட்டு விட்டு விடுதிக்கு சென்றார் கிருஷ்ணசாமி.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் கிருஷ்ணசாமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் சிறிது நேரத்திலேயே பிரிந்தது.
இந்தநிலையில் இந்த தகவல் தெரியாமலேயே கஸ்தூரி மகாலிங்கம் 3 மணி நேரத் தேர்வை எழுதி முடித்தார். இதனிடையே விளாக்குடியில் உள்ள கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியை செல்போனில் முதல்வர் எடப்பாடி தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
அதுபோல் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணனும் பாரதி மகாதேவியை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது உடலை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.