எடியூரப்பா நிலையில் எடப்பாடி.. எப்படி அரசை காப்பாற்றினார் சபாநாயகர் தெரியுமா?
சென்னை: எடியூரப்பா அரசில் என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டதோ அதையே எடப்பாடி பழனிச்சாமி அரசும் இப்போது எதிர்கொண்டு வருகிறது.
பாஜக முதல் முறையாக தென் இந்தியாவில் ஆட்சி அமைத்துவிட்டதாக பெருமை பேசத்தொடங்கிய காலகட்டம் அது. தங்கள் கர்நாடக பிரச்சார பீரங்கியான எடியூரப்பாவை தங்கள் அரசின் முதல்வராக்கி அழகு பார்த்தது பாஜக தலைமை. ஆனால் இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.
பண பலம் மிகுந்த பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத குவாரித் தொழிலுக்கு லேசாக இடைஞ்சல் கொடுத்தார் எடியூரப்பா. எரிமலையாக வெடித்துவிட்டனர் ரெட்டிகள்.
ரெட்டிகள் ஆதிக்கம்
பாஜக கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், 5 சுயேச்சைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் ரெட்டி சகோதரர்கள். ரெட்டி சகோதரர்களில் கருணாகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவர் எடியூரப்பா அரசில் அமைச்சர்களாக இருந்ததும் இந்த ரிசார்ட் அரசியலுக்கு எம்எல்ஏக்களை ஈர்த்து செல்ல எளிதாக வழி அமைந்தது.
ஆளுநர் அதிரடி
எடியூரப்பா ஆட்சி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறி, 16 எம்எல்ஏக்களும், ஆளுநரிடம் புகார் அளித்தனர். தனது உடலில் காங்கிரஸ் ரத்தம்தான் ஓடுகிறது என ஆளுநர் என்பதையும் மறந்து பேட்டியளித்து வந்த பரத்வாஜ் இந்த வாய்ப்பை விடுவாரா? உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். ஆளுநர், ரெட்டி சகோதரர்கள் என இருமுனை தாக்குதலுக்கு உள்ளான எடியூரப்பா, சபாநாயகர் போப்பையாவை தஞ்சமடைந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
16 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து இரவோடு இரவாக உத்தரவிட்டார் சபாநாயகர். இவர்களை பேரவைக்குள்ளேயே விடாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு தப்பியது. இதனால் கோபமடைந்த ஆளுநர், அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவித்துவிட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். 3 நாட்களிலேயே நடந்த அந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்களிக்க விடப்படவில்லை. எடியூரப்பா அரசு மீண்டும் தப்பியது.
கலைக்க பரிந்துரை
ஆனால் விடவில்லை பரத்வாஜ். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் நடந்து கொண்டதற்குக் கண்டனம் தெரிவித்த பரத்வாஜ், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனாலும் அதன் மீது மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மீண்டும் பரிந்துரை
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு சென்றனர். ஹைகோர்ட் சபாநாயகர் முடிவை ஆதரித்த நிலையில், இறுதியாக சுப்ரீம் கோர்ட்டோ, சபாநாயகர் உத்தரவு செல்லாது என அறிவித்தது. இதையடுத்து மீண்டும் ஒருமுறை ஆட்சியை கலைக்க ஆளுநர் பரிந்துரை செய்தார். அப்படியும் அசையவில்லை மத்திய அரசு. இப்படித்தான் எடியூரப்பா அரசு பல்வேறு பெரும் பிரச்சினைகளில் தப்பியது.
எடப்பாடி அரசு
இப்போது எடப்பாடி அரசும், எடியூரப்பா அரசை போன்ற சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளது. எதிர்ப்பாளர்களான 19 எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினால், ஏற்கனவே எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு கோர்ட்டுக்கு செல்ல அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அப்போதைய கர்நாடக ஆளுநராவது தொடர்ந்து எடியூரப்பா அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இப்போதைய தமிழக ஆளுநரோ, எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றே கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.