பற்றி எரியும் அதிமுக.. சபாநாயகருடன் எடப்பாடி அவசர சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக 3 அணிகளாக சிதறியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் அணி உதயமான நிலையில் சசிகலா தலைமையிலான அணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு சார்பாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியதில் எந்த மாற்றமும் இல்லை என எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் நேற்று அறிவித்தனர். டிடிவி தினகரனை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்கக்கூடாது என எச்சரித்திருந்தனர்.
அரசு கவிழும் ஆபத்து
இந்நிலையில் எடப்பாடி அணி இரண்டாக உடைந்துள்ளது. டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரனை சந்திக்கும் எம்எல்ஏக்களின்ன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து உருவாகியுள்ளது.
சபாநாயகருடன் சந்திப்பு
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுவை திடீரென சந்தித்துள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாலை எம்எல்ஏக்களுடன்
இதனிடையே இன்று மாலை 9 மாவட்ட எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவுள்ளார். அப்போது ஆட்சி மற்றும் கட்சி நிலவரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
நாளை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
நாளை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. வரும் 14 ஆம் தேதி சட்டசபைக் கூட்டம் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.