மேட்டூர் அணையை திறப்பதில் இப்படி ஒரு சிக்கல் இருக்குதா? தமிழக அரசுக்கு புது தலைவலி
Recommended Video

சென்னை: மேட்டூர் அணையை வரும் 19ம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ள நிலையில், இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்ற கேள்வியை விவசாய சங்கங்கள் எழுப்பியுள்ளன.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. உபரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் வரும் 19ம் தேதி மேட்டூர் அணையை சம்பா நெல் சாகுபடிக்காக திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சிக்கல் ஆரம்பம்
ஆனால், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அணைகள் அனைத்துமே ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் வரும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக அறிவிக்க கூடாது என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆணையத்திற்கே அதிகாரம்
இதுபற்றி விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ஆணையத்திற்குதான் அணைகள் திறப்பு, மூடுவது குறித்த அதிகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதை கர்நாடகா எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் தன்னிசையாக அணையை திறப்பதாக அறிவித்துள்ளது கர்நாடகாவிற்கு சாதகமாகிவிடும்.

தீர்ப்புக்கு எதிரானது
இன்றைக்கு உபரி நீரை திறக்க முதல்வர் தனக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை நாட்களில், இதையே காரணமாக வைத்து உச்சநீதிமன்ற தீர்ப்பபை தமிழகம் மீறியதாக கர்நாடகா வாதிடும். அப்போது தமிழகத்திற்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.

காவிரி நடுவர் மன்றம் கலைப்பு
காவிரி ஆணைய அனுமதியுடன் அணையை திறக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, காவிரி நடுவர்மன்றம் கலைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காவிரி தாவா பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டது நடுவர்மன்றம். 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இப்போது காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் நடுவர்மன்றம் கலைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications