ஜெயலலிதா இருந்தபோது விட தற்போது அதிமுகவில் உறுப்பினர்கள் அதிகம்.. எடப்பாடி பெருமிதம்
சென்னை: அதிமுகவில் தற்போது 1.10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இது ஜெயலலிதா இருந்த போது இருந்த எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய உறுப்பினர்கள் தங்கள் அட்டையை புதுப்பிக்கும் பணியும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய முதற்கட்டப் பணிகள், ஜூன் 30-ஆம் தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து நவீன வடிவில் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முதல்கட்டமாக 60 லட்சம் பேருக்கான அட்டைகள் தயாரான நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.
[டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி.. ஓபிஎஸ் வார்னிங்!]
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் புதிய உறுப்பினர்கள் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துள்ள நிலையில், அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருக்கின்றனர்.
இன்னும் ஆறு மாதத்தில் 50 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள். ஜெயலலிதா காலத்தைவிட குறுகிய காலத்தில் அதிகம் பேர் அதிமுகவில் உறுப்பினராகியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.