ஸ்வீட் + சிரிப்பு.. பேரவையிலேயே கொண்டாடிய எடப்பாடி.. மகிழ்ச்சி வெள்ளத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள்!
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்திலேயே, எடப்பாடியார் வாழ்க என முழக்கமிட்டு, இனிப்பு வழங்கி அதிமுக எம்.எல்.ஏக்கள் கொண்டாடினர்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஈபிஎஸ் அறிவித்த அன்பரசன் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொதுச் செயலாளர்: அதன்படி, பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்பதால், கட்சியின் பொதுச் செயலாளராக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவி உட்பட ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது.
ஆனால், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, கர்நாடக தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் போட்டியிடப் போவதாக அறிவிக்க, இரட்டை இலை சின்னம் தொடர்பான சிக்கல் உருவானது. எனவே, தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
அங்கீகாரம் கிடைத்தது : எடப்பாடி பழனிசாமியின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தலைமைத் தேர்தல்ஆணையம் இன்று தனது முடிவை அறிவித்துள்ளது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தேர்தல் ஆணைத்தின் அங்கீகாரத்தை அடுத்து எடப்பாடி பழனிசாமி அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த அங்கீகாரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டபோது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பேரவையில் கொண்டாட்டம் : தேர்தல் ஆணைய உத்தரவு வந்ததுமே, சட்டமன்ற பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். எடப்பாடியார் வாழ்க என அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்தோடு அதிமுகவினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் இனிப்பு வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.












Click it and Unblock the Notifications