ஏற்காட்டில் எடப்பாடி பழனிச்சாமி... ஜெ. பாணியில் சொன்ன கதை என்ன தெரியுமா?
கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல கதை ஒன்றை சொல்லி, அ.தி.மு.கவின் தற்போதைய நிலையை எடுத்துக்காட்டியுள்ளார்.
சேலம்: கோடைவாசஸ்தலமான ஏற்காட்டில் 42வது கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சியை நேற்று தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப்போல கதை ஒன்றைச் சொல்லி பார்வையாளர்களை ஈர்த்தார்.
பரவாயில்லையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல கதைச் சொல்ல தொடங்கிட்டாரே முதல்வர் என்று நினைத்த அ.தி.மு.க.வினர் , கதையின் முடிவைக் கேட்டு இவர் யாரைக் குத்திக்காட்டுகிறார் என்று புரியாமல் கடுகடுத்துள்ளனர். பின்னர் நல்லவேளை அவர் நம்மைச் சொல்லவில்லை,எதிர் அணியைச் சொல்கிறார் என்று சமாதானமாகியுள்ளனர்.

குளுகுளு ஏற்காட்டில் முதல்வர் சொன்ன குட்டிக் கதை இதுதான்...
" எறும்புகள் எல்லாம் ஒன்று கூடி மாநாடு நடத்தின. இதில் தங்களின் உயர்வுக்காக ஓர் எறும்பைத் தலைவராகத் தேர்வு செய்தன. தலைவர் எறும்புக்கு இறைவனிடம் பக்தி அதிகம். அதனால் திடீரென்று தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
அப்போது எறும்புகளின் தலைவன் முன்னே தோன்றிய இறைவன், ' உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இறைவனே கண்முன் வந்துவிட்டாரே என்ற கர்வத்தில், இறைவா நான் கடித்தால் இறந்துவிடவேண்டும் என்று வரம் கேட்டது. இறைவனும் உடனே வரம் கொடுத்தார்.
இதையடுத்துக் கர்வம் கொண்ட அந்த எறும்புகளின் தலைவன், இறைவன் கொடுத்த வரம் பலிக்கிறதா என்பதை உடனே உறுதி செய்திட வேண்டும் என்று அவசரப்பட்டது. அப்போது அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. இறைவன்தான் இருந்தார். சரி இறைவனையே கடித்துவிட வேண்டியதுதான் என இறைவனின் காலை கடித்தது. அச் சமயத்தில் இறைவன் எறும்பைத் தட்டிவிட, அந்தத் தலைவன் எறும்பு கீழே சுருண்டு விழுந்தது. அப்போது அந்த எறும்பு, ' இறைவா உன் வரம் பலிக்கவில்லை, நானல்லவா இறக்கப் போகிறேன் ' எனக் கேட்டது.
அதற்குப் பதிலளித்த இறைவன், 'கடித்தால் இறந்துவிடவேண்டும் என்றுதானே கேட்டாய், கடிபட்டவர் இறந்துவிடவேண்டும் என்று நீ கேட்கவில்லையே, அதனால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது' என்றார்.
இறைவன் சொன்னதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே என்ன என்பது தெரியும். தலைவராக இருப்பதற்கு பொறுமையும் அடக்கமும் தேவை. எதையும் சிந்திக்காமல் பேசிவிடக் கூடாது" என்றார் பழனிச்சாமி.
எதிர் அணியின் தலைவர் எறும்பு என்றால் இறைவன் யார்?












Click it and Unblock the Notifications