யாருக்கு என்ன இலாகா.. குஷி மோடில் எடப்பாடி பழனிசாமி.. விஜய்யை நம்பும் அதிமுக நிர்வாகிகள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கட்டாயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வலிமையுடன் இருப்பதோடு, விஜய் அதிக வாக்குகளை பிரித்தால் அது அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்றும் அவரின் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த சூழலில், கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளார். மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

அதேபோல் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். தவெக அதிகளவில் வாக்குகளை பிரிப்பதால், திமுகவினர் குழப்பத்தில் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி கட்டாயம் அதிமுக ஆட்சி அமையும் என்று நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்கையில், சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர் உள்ளிட்ட கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக வலுவாக இருக்கிறது.
இந்த பகுதியில் வாக்கு சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு குஷி மோடில் இருக்கிறது. வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதிகளில் தவெகவுக்கு கட்டமைப்பும் கிடையாது.. வாக்கும் கிடையாது.. அப்படி இருந்தும் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்றால், ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நம்புகிறாராம்.
சேலம் மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகிகளுடன் கண்டிப்பாக அதிமுக ஆட்சிதான் அடுத்து என்று கொண்டாட்டமாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் அதிக வாக்குகளை பிரித்தால், அது அதிமுகவுக்கு சாதகமாக தான் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சேலத்தில் யாருக்கு என்ன இலாகா என்பது வரை ஆலோசிக்க தொடங்கிவிட்டாராம்.
அதிமுக எங்கெல்லாம் கூட்டணி கட்சியை நிறுத்தி இருக்கிறதோ, அங்கெல்லாம் தவெக 2வது இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் தவெக பிரிக்கும் வாக்குகள், அதிமுகவுக்கு சாதகமாக மாறலாம் என்றும் அக்கட்சியினர் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications