சசிகலா தரப்பு மீது பாய தயாராகும் வழக்குகள்.. ஜெ.ஸ்டைலில் தனி "ஸ்குவாடு" ரெடியாகிறதாம்!
சசிகலா தரப்பு மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் அணியை உருவாக்கியிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: ஜெயலலிதா பாணியில் தமக்கு நம்பிக்கையான ஐபிஎஸ் அதிகாரிகள் டீமை உருவாக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த அதிகாரிகள் டீமை உருவாக்குவதே சசிகலா தரப்பு மீது அடுத்தடுத்து வழக்குகள் போடுவதற்குதான் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்கும் முயற்சியில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கொடுத்த அதிகாரிகளை தன்பக்கம் வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறாராம் எடப்பாடி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை விரும்பாமல் ஜெயலலிதாவின் தனிச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் ராமானுஜம் உள்பட பலரும் விலகினார்கள். தலைமைச் செயலகத்தில் இருந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்குத் திரும்பினார்கள்.
சசி தரப்புக்கு எதிராக வியூகம்
ஆட்சிப் பொறுப்பு எடப்பாடியின் கைகளுக்கு வந்தவுடன் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஆட்சி லகானை செலுத்தி வந்தார் எடப்பாடி. ஆனால் ஆட்சிக்கு எதிராக செயல்படும் சசிகலா தரப்பினரின் அடுத்தடுத்த நகர்வுகளுக்குச் செக் வைக்க இப்படியொரு ஆப்ரேஷன் தேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் எடப்பாடியார் என்கின்றன கோட்டை அதிகாரிகள்.
அன்று ஜெ. வேகம்
2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றவுடன் சசிகலா தரப்பினர் பலரும் வளைக்கப்பட்டனர். ஜெயலலிதா கோபத்துக்கு முன்னால் சசிகலா தரப்பால் எதையும் செய்ய முடியவில்லை.
சசிதரப்பு முயற்சி முறியடிப்பு
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர மன்னார்குடி உறவுகள் முயற்சி எடுத்தார்கள். ஆனால், மத்திய அரசின் நேரடி பார்வை தமிழ்நாட்டின் மீது விழுந்ததால், டெல்லிக்கு செல்லப் பிள்ளையாகவே மாறிப் போனார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டம்
இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறது சசிகலா தரப்பு. எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கவும் சசிகலா தரப்பு சதித்திட்டம் தீட்டி வருகிறது.
ஐபிஎஸ் டீம்
அவர்களைப் பொறுத்தவரையில் ஆட்சி போனால்தான் கட்சி கிடைக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதுதான் காரணமாம். இப்படியொரு நகர்வை உணர்ந்து கொண்டதால்தான் ஜெயலலிதா பாணியில் ஐ.பி.எஸ் டீம் ஒன்றை அமைக்க இருக்கிறார் எடப்பாடி.
ஜெ. விசுவாசிகள்
இந்த அதிகாரிகள் அனைவரும் ஜெயலலிதா மீது விசுவாசம் காட்டியவர்கள். ஜெயலலிதாவுக்கு எதிராக அணி சேர்த்த குற்றத்துக்காக ஓ.பி.எஸ், நத்தம், பழனியப்பன் வீடுகளில் ரெய்டு நடத்தி, மிகப் பெரிய புதையலை கார்டன் கஜானாவில் சேர்த்தவர்கள்.
ஆபரேஷன் ரெடி
சசிகலா தரப்புக்கு எதிரான ஆபரேஷனை இவர்கள் துல்லியமாக செய்து முடிக்கலாம் என பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம் எடப்பாடி. சசிகலா தரப்பு தமக்கு எதிரான நடவடிக்கைகளில் வேகம் காட்ட தொடங்கினால் 'வேலையை' காட்டுமாம் இந்த டீம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.