சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை... எடப்பாடி பழனிச்சாமி பொளேர்
சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மதுரை : சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் சேர்ந்து என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமாழ வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வந்தனர். பெரும்பாலானோர் வேதனை அடைந்தனரே தவிர பாஜகவை பகிரங்கமாக விமர்சிக்கவில்லை.
இன்னும் சிலரோ வருமான வரித்துறையினர் அவர்களின் கடமையை செய்தனர் என்றனர். இந்த சோதனைக்கு காரணமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும்தான் என்று தினகரனும் அவரது ஆதரவாளர்களும் குற்றச்சாட்டினர்.
ஜெ.அறையில் சோதனை இல்லை
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் வருமான வரித் துறை சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சோதனை எதனால் நடைபெற்றது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடைபெற்றது
எம்எல்ஏக்கள் தேர்வு
சசிகலாதான் என்னை முதல்வராக்கினார் என்று தினகரன் கூறிவருகிறார். அதுபொய். என்னை முதல்வராக்கியது ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும்தான். அதிமுகவுக்கு முதல்வர் யார் என்று தேர்வு செய்யும் இடத்தில் அவர் இருந்திருந்தால் இன்று எம்எல்ஏக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகத்தானே இருந்திருப்பர். கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் இப்பதவிக்கு வந்துள்ளேன்.
தொடர்பு கிடையாது
தினகரன் கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லை. டிடிவி தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இருக்காது. சில பேர் செய்துள்ள தவறுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளேன்.
பிரச்சினையை தவிர்க்க
நான் சேலத்தில் இருந்தபோது டிடிவி தினகரன் தன்னை ஆர்.கே. நகர் வேட்பாளராக அவராகவே அறிவித்துக் கொண்டார். கட்சியில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அவரை நாங்கள் ஆதரித்தோம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.