செலவைக் குறைக்க ....10,12ம் வகுப்புகளுக்கு சேர்த்தே தேர்வு நடத்த தமிழக அரசு திட்டம்?
கோவை: தேர்வுக்கான செலவுகள் மற்றும் ஆட்கள் தேவையைக் குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சேர்த்து நடத்தலாமா என்று தமிழக அரசின் கல்வித்துறையும்,தேர்வுகள் இயக்குநரகமும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உண்மையாக இருந்தால், வரும் மார்ச் மாதத்தில் பிளஸ் டூ தேர்வுடன், 10ம் வகுப்பு தேர்வும் இணைத்தே நடத்தப்படும் என்று தெரிகிறது.

பறக்கும் படைகளை அமைப்பது, ஆசிரியர்களுக்கு தேர்வு அதிகாரிகளுக்கான படிகளைத் தருவது, கேள்வித்தாள்களை கொண்டு செல்வது, விடைத்தாள்களை அனு்பி வைப்பது என பல விதமான செலவுகளை ஆண்டுதோறும் கல்வித்துறை சந்தித்து வருகிறது. தேர்வுகள் தனித் தனியாக நடத்துவதால் இரட்டிப்புச் செல்வும் ஆகிறது.
எனவே இவற்றை குறைக்க இரு தேர்வுகளையும் இணைத்து நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இயக்குநரகம் யோசனை செய்து வருகிறதாம்.
இப்படி இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்தினால் பாதி செலவு குறையும் என்பது தேர்வுகள் இயக்குநரகத்தின் யோசனையாகும். மேலும் ஆசிரியர்கள் தேவையும் பாதியாக குறையும். தேர்வு மையங்களும் பாதியாக குறையும்.
தேர்வுகளை நடத்தும்போது தேர்வு கண்காணிப்பாளர்களை நியமிப்பதில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிஜி ஆசிரியர்கள், பிடி ஆசிரியர்கள் தவிர பிற ஆசிரியர்களையும் தேடிப் பிடித்துக் கூப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சிக்கல்களைத் தீர்க்க இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்துவதே சரியான வழி என்று தேர்வுகள் இயக்குநரக அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் இயக்குநரக அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தியுள்ளனர். அவர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளனர். ஆனால் இந்த யோசனைக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
அதேசமயம் சில மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம்.
இந்த யோசனை அமலாக்கப்பட்டால் ஒரே தேர்வு அறையில் பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து உட்கார வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications