கல்வியை பாதுகாக்க அக்டோபர் 7ல் 1000 கல்வி நிறுவனங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதியன்று கல்வியை பாதுகாக்க 1000 கல்வி நிலையங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் மாநில தலைவர் வீ.மாரியப்பன், மாநில செயலாளர் பி.உச்சிமாகாளி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய, மாநில அரசுகளின் தவறான கல்விக் கொள்கையின் விளைவாக ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.

புதிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியில், பாடத்திட்டத்தில், கற்பித்தல் முறையில் எந்த மாற்றமும் இன்றி முதலாளிகளுக்கு அடிமைகளை உருவாக்கும் கல்வித்துறையாய் மட்டுமே இருக்கிறது. இதை மாற்றிட இந்திய மாணவர் சங்கத்தின் 24 ஆவது மாநில மாநாடு 2015 செப்டம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக், சட்டம், மருத்துவம், பொறியியல், பல்கலைக்கழகம், விடுதி என அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அரசாணை எண் 270ன்படி அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே உருவாக்கிடவும், தமிழகத்தில் மூடப்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை திறந்திடவும், சட்டக்கல்லூரிகளில் உள்ளிட்டு அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிகணிணி வழங்கிடவும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டு எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி கட்டண விலக்கு அளிக்கும் அரசாணை எண் 92ஐ தமிழகத்தில் அமல்படுத்திடவும், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தள்ளாடும் 34 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றிடவும், இளைய தலைமுறையை மது இல்லா தலைமுறையாக உருவாக்கிட பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றிடவும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, கோவை சிபிஎம் கல்லூரி, திருநெல்வேலி மனோ கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளை அரசே ஏற்று நடத்திடவும், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிடவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1000 கல்விநிலையங்களில் 5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை அக்டோபர் 7ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தின் 24 ஆவது மாநில மாநாட்டின் அறைகூவலை ஏற்று தேசம் காக்க, கல்வி காக்க மாவட்டந்தோறும் பள்ளி, கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு செய்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்களை வீதியில் இறக்கி போராட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications