ஜெ.க்கு ஆதரவாக சென்னையில் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்- தி. வேல்முருகன் பங்கேற்று வாழ்த்து!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச்செயலரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில் , இந்தியா வாழ் ஈழத் தமிழரின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமை வகித்தார். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.