சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2வது பெண் பலி; தமிழகத்தில் இதுவரை 12 பேர் மரணம்
சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் அமிர்தலட்சுமி என்பதாகும். இவர் எழும்பூர் கெங்குரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமாரின் மனைவியாவார்.
கடந்த சிலதினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிகப்பட்டார். இதையடுத்து அமிஞ்சிகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அமிர்தலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், அமுதலட்சுமிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கடந்த 4 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அமிர்தலட்சுமி இறந்து விட்டதாக கூறினர்.
இது பற்றி கேள்விபட்டதும், அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து இன்று காலையில் எழும்பூர் கெங்கு ரெட்டி தெரு பகுதிக்கு சென்ற சுகாதார துறையினர், அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமிர்தலட்சுமி வசித்து வந்த வீட்டை சுத்தப்படுத்தி வெள்ளை அடித்தனர். பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பன்றிக்காய்ச்சலுக்கு கொளத்தூரை சேர்ந்த ஒரு பெண் ஏற்கனவே பலியாகி இருக்கும் நிலையில், எழும்பூர் அமிர்தலட்சுமியுடன் சேர்த்து சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர்.
தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்