நீயா நானா... அரசியல் அதிகாரத்துக்காக 'ஈகோ' யுத்தம் நடத்தும் எடப்பாடி,ஓபிஎஸ் கோஷ்டிகள்!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்ற இரண்டு பேரின் ஈகோ யுத்தமாக மாறியுள்ளது அதிமுக இணைப்பு விவகாரம்.இரண்டு அணியின் முக்கிய முதல்வரிசை தலைவர்கள் தங்களுக்குள் ஒரு 'ரகசிய பிளாட் பார்மில்' பேசிக்கொள்கிறார்கள்.அதில் நல்ல முடிவை அணியின் தலைவர்கள் எடுத்தால் நமக்கு நல்லதுதானே.அவர்களுக்கு நாம் எப்போதும் ஒத்துழைப்புக் கொடுப்போம் என முடிவும் செய்துள்ளனர்.
ஆனால் இரண்டு அணியின் தலைவர்கள் நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது.பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் விதித்துக்கொள்ளும் நிபந்தனைகள் அவர்களின் சந்திப்பை,அணிகளின் பேச்சுவார்தையைத் தள்ளிப்போடுகிறது. இதில் இரண்டு அணிகளின் நிர்வாகிகள்,தொண்டர்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
அதிமுக இணைப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தள்ளிப்போட்டுள்ளார் என்கிறர்கள் ஓபிஎஸ் அணியினர்.சேலத்தில் பேட்டியளித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி,'எங்களுக்கு 122 எம்எல்ஏக்கள், 29 மக்களவை உறுப்பினர்கள், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள், 50 மாவட்ட செயலாளர்களில் 48 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு உள்ளிட்ட 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவு என அனைத்து தரப்பிலும் எங்களுக்கு தான் அதிகமாக ஆதரவு உள்ளது" என்றார்.
இதில் கடுப்பான ஓபிஎஸ், வடசென்னையில் நடந்த மே தினக் கூட்டத்தில்,'எடப்பாடி அணியினர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபடநாடகம் ஆடுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி டி.டி.வி.தினகரனின் கூட்டாளி' என்று கடுமையாகத் தாக்கினார்.இதனால் இரண்டு அணிகளும் இணையவே வாய்ப்பில்லை என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.
ஓபிஎஸ் ஊழல்கள் என்ன?
ஓபிஎஸ் கடந்த 6 ஆண்டுகளாக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது என்னென்ன தவறு செய்தார். அவரின் துறையில் என்னென்ன முறைகேடு நடந்தது.மணல் கடத்தல் அதிபர் சேகர் ரெட்டிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? கிரானைட் முறைகேடுகள், தாதுமணல் முறைகேட்டில் அவருக்கு பங்கு உள்ளதா? அதில் விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட அனுமதிகள், சலுகைகள் குறித்தும் தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்பு நாதனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கவும் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்
ஓபிஎஸ் குடும்பத்துக்கு குறி?
அதே போல ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது என்ன வகையான டெண்டர்கள்,எந்த துறைகளில் அதிகம் போடப்பட்டன,அவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்றும் துருவ ஆரம்பித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரிகள் டீம்.அதோடு ஓபிஎஸ் முதல்வர் பதவியைப் பயன்படுத்தி,அவரின் தம்பி, மகன்கள் உள்ளிட்ட உறவினர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் பட்டியல் எடுக்க சொல்லியிருக்கிறார் பழனிச்சாமி.
எடப்பாடியின் தில்லாலங்கடிகள் என்ன?
வரும் 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பகீர் குற்றச்சாட்டுக்களை வெளியிட தேவையான ஏற்பாடுகளை ஓபிஎஸ் முடுக்கிவிட்டுள்ளார்.
எடப்பாடி தில்லுமுல்லு
எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்றதுமுதல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்,போடப்பட்ட டெண்டர்கள், கையெழுத்திடப்பட்ட கோப்புகளின் உண்மைத்தன்மைகள் என்று எல்லாவற்றையும் தோண்டி எடுக்கிறார்கள் ஓபிஎஸ் அணையின் ஆதரவு அதிகாரிகள்.அதில் நிறைய தில்லுமுல்லுகள் நடந்துள்ளன என்பது ஓபிஎஸ் அணியின் அசைக்கமுடியாத வாதம்.
பழனிச்சாமி,பன்னீர்செல்வத்தின் ஈகோ யுத்தமாக மாறிவிட்டது அதிமுக இணைப்பு.இன்னும் என்னனென்ன நடக்குமோ...