ஜல்லிக்கட்டால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்கு பாதிப்பு இல்லை: இல.கணேசன் நம்பிக்கை
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி பாதிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடைபெறாமல் போனது.

இது தென் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் ஜல்லிக்கட்டு தடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இல. கணேசன், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் வாதாடி வெற்றி பெறுவோம். ஜல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி பாதிக்காது.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து 3 அல்லது 5 நாட்களில் தேசிய தலைமை முடிவு எடுக்கும். இதில் தாமதம் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications