ஜெயலலிதா பற்றி அவதூறாகவெல்லாம் பேசவில்லை.. கொடும்பாவி எரித்தால் பரவாயில்லை: இளங்கோவன்
சென்னை: நான் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி குறித்து டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க சென்றிருந்த இளங்கோவன், சென்னை திரும்பியபோது, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திருவாரூரில் கருணாநிதி முன்னிலையில், ஜெயலலிதா குறித்து நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அருவருக்கத்தக்க வகையில் இளங்கோவன் பேசியதாக குற்றச்சாட்டு கிளம்பியது குறித்தும், அதிமுகவினர், இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடத்துவது குறித்தும், நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது இளங்கோவன் கூறுகையில், நான் ஜெயலலிதா பற்றி அவதூறாக எதையும் பேசவில்லை. எனது கொடும்பாவியை கொளுத்துவதாக கேள்விப்பட்டேன். கொளுத்தினால் கொளுத்திவிட்டு போகட்டும் என்றார்.
காங்கிரசில் போட்டியிடுவோருக்கு பணம் பெற்றுக்கொண்டு சீ்ட் கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளதே என்ற கேள்விக்கு, "சீட் கிடைக்கவில்லை என்பதற்காக சிலருக்கு வருத்தம். எனவே குற்றம் சொல்கிறார்கள். ஐஎன்டியூசியை சேர்ந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். பணம் வாங்கிக் கொண்டு சீட் தரவில்லை. சீட் கிடைக்காதோர் வருத்தப்படுவது இயற்கையானது. அது போகப்போக சரியாகிவிடும்". இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications