திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்.. வாகன சோதனையில் 3 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் பறிமுதல்
மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை: மதுரை அருகே உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அக்.16ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது.

இதனிடையே நேற்று அதிகாலை மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி டோல்கேட் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலூரிலிருந்து மதுரை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஒரு பையில் ரூ.19 லட்சத்து 29 ஆயிரத்து 380 ரொக்கப்பணமும், மற்றொரு பையில் 3 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகளும் இருந்தன. இதன் மதிப்பு 93 லட்சத்து 43 ஆயிரத்து 750 ஆகும்.
இந்த தங்கம், பணத்தை மதுரை மேலச்செட்டி வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கொண்டு வந்திருந்தார். விசாரணையில் இவர் நகை வியாபாரி என தெரியவந்தது. இருப்பினும் அவரிடம் தங்கத்திற்கும், ரொக்க பணத்திற்கும் போதிய ஆவணங்கள் இல்லை. உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து இவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications