ஓட்டு கேட்டு ஊருக்குள்ள வராதீங்க… அதிமுக எம்பி தம்பிதுரையை அதிர வைத்த வாக்காளர்கள்
கரூர்: கரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அதிமுக எம்.பியும் தற்போதைய அதிமுக வேட்பாளருமான தம்பித்துரையை ஊருக்கு நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பித்துரை பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை செவலிப்பட்டி என்ற இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா, அட்மா சேர்மன் பழனியாண்டி, துணை சேர்மன் திருமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சென்றனர்.
இரவு 7.30 மணியளவில் வானதிரையான்பட்டி கிராமத்தில் தம்பிதுரை பிரச்சாரம் செய்ய சென்ற போது கிராம மக்கள் ‘கடந்த 5 வருடத்தில் எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. இங்கு ஓட்டு கேட்டு நீங்கள் ஊருக்குள் வரக் கூடாது‘ என்றனர்.
இதனால் தம்பிதுரையுடன் வந்த அதிமுகவினருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் சுப்பையாவின் மகன் சக்திவேல் (38) என்பவரது மண்டை உடைந்தது. இதனால், தம்பிதுரை பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.