அனுமதியின்றி பொதுக்கூட்டம்: அதிமுகவினர் 100 பேர் மீது வழக்கு
நெல்லை: நெல்லை அருகே அனுமதியின்றி கூட்டம் நடத்தியதற்காக அதிமுகவினர் 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை தொகுதி சார்பில் ஆலங்குளம் எஸ்எஸ்என் திருமண மண்டபத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம் நடத்த முறைப்படி தேர்தல் அலுவலர்களிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் கமலகுமாரி கூட்டம் நடந்த திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் இந்த கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறாததால் கூட்டத்தை நடத்தக் கூடாது என அவர் எச்சரித்தார். ஆனால் நிர்வாகிகள் அதை பொருட்படுத்தாமல் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதனால் திகைத்த அவர் இது குறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அவரின் புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சந்தன கார்த்திகா அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக சுமார் 100 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதிமுகவினர் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நெல்லை ஆளும்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications