பேசாம ஆர்.கே.நகர் தொகுதியை ஏலத்தில் விடலாம்.. பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தி பேட்டி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியை ஏலம் விட்டுவிடலாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு டிடிவி தினகரன் தரப்பு உட்பட பல தரப்பினரும் பணதக்தை அள்ளி வீசி வாக்காளர்களை கவர முயற்சி செய்து வருவதாக புகார்கள் குவிகின்றன. வீடியோக்கள் சமூக தளங்களில் வெள்ளமென வாய்கின்றன.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் இந்தியாவில் எங்குமே நடைபெற்றிராத அளவுக்கு முறைகேடுகள் அரங்கேற்றப்படுகிறது.

வெளிப்படை
தொகுதியில் பண வினியோகம் ஒளிவு மறைவாக நடக்கவில்லை, வெளிப்படையாகவே நடக்கிறது. துணை ராணுவம், போலீஸ், தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஒவ்வொரு தெதருவிலும் அமைச்சர்கள், வெளியூர்க்காரர்கள் அமர்ந்தபடி பொதுமக்களை மிரட்டி வருகிறார்கள்.

தலைகுனிவு
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு தேர்தலை நடத்துவதைவிட தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதியை ஏலம் போட்டு விற்று விடலாம். தொகுதியை விற்பனை செய்வதற்கான ஏலம் என்றைக்கு நடைபெறும் என்பதை முன் அறிவிப்பு செய்து ஏலம் விடலாம்.

வருமான வரி சோதனை
தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததற்காகத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அந்த சோதனையும் முறையாக நடைபெறவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக, சோதனை நடந்து கொண்டிருந்தபோது அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோரை வீட்டுக்குள் அனுமதித்துள்ளனர்.

ஆவணங்கள் அபேஸ்
வருமான வரி சோதனை நடந்த போது வீட்டுக்குள் இருந்த ஒருவர் ஆவணங்களை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார். மடியில் கனம் இல்லை என்றால் ஏன் அப்படி ஓட வேண்டும். இதனால்தான் யாரையும் உள்ளே விடாமல் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது வழக்கம். அமைச்சர்கள் உள்ளே செல்லாமல் இருந்திருந்தால் சோதனை தடை இல்லாமல் நடந்திருக்கும்.

வீட்டுக்கு 1 லட்சம்
மத்தியப்பிரதேசத்தில் இதேபோல தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர் ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதிமுகவின் அம்மா, புரட்சி தலைவி அம்மா ஆகிய இரு அணிகள், தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் சராசரியாக ஒரு வீட்டுக்கு 1 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட மோசமான தேர்தலை எந்த மாநிலத்திலும் பார்த்திருக்க முடியாது.

சம்மந்தம் இல்லை
ஒவ்வொரு கட்சியும் தங்கள் மீதுள்ள தவறுகளை திசை திருப்ப எதற்கெடுத்தாலும் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று குற்றம் சுமத்துகின்றனர். தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை போன்றவை எல்லாம் தனி அதிகாரம் படைத்த அமைப்புகள். அவைகளுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியே மத்திய அரசின் தூண்டுதல்படியே வருமான வரி சோதனை நடக்கிறது என்றால் பாஜக ஆளும் மத்தியபிரதேசத்தில் அமைச்சரே எப்படி கைது செய்யப்பட்டிருப்பார்? இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications