துணைப் பொதுச் செயலாளர் பதவி மிஞ்சுமா? தினகரனை வதைக்கும் 'ஏப்ரல் 17 '
சென்னை: தேர்தல் ஆணையத்தில், ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ள விசாரணையை நினைத்து கலக்கத்தில் உள்ளாராம் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.
' தேர்தல் வெற்றியைவிட ஏப்ரல் 17-ல் தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பாக நடக்கப் போகும் விவாதம் குறித்த கவலைதான் அவரை வாட்டி வருகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
புகார்கள்
'அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என்று கூறி, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. இதே புகாரைத் தேர்தல் ஆணையத்தில் அளித்தார் பன்னீர்செல்வம் ஆதரவு அணியின் அ.தி.மு.க எம்.பி மைத்ரேயன்.
வீடியோ காட்சிகள்
அவர் கொடுத்த புகாரில், ' அ.தி.மு.க கட்சி விதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. அவர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது' என அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த சசிகலா தரப்பினர், ' பொதுக்குழு உறுப்பினர்களால் முறைப்படிதான் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இப்போது எதிர்ப்பவர்கள்தான் பொதுச் செயலாளர் பதவிக்கு அவரை முன்னிறுத்தினார்கள்' எனத் தெரிவித்து, பொதுக்குழு தொடர்பான வீடியோ காட்சிகளையும் இணைத்திருந்தனர்.
இரட்டை இலை
இதுகுறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ஆர்.கே.நகருக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது' என பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணையின்போது, சசிகலாவுக்காக வாதாடினார் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். இறுதியாக, இரட்டை இலை சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
17ம் தேதி விசாரணை
மேலும், ' இந்த உத்தரவு தற்காலிகமானதுதான். இரண்டு தரப்பினரும் நியாயமாக நடந்து கொள்வதற்காகத்தான் இப்படியொரு உத்தரவு பிறப்பித்தோம். ஏப்ரல் 17-ம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடக்கும்' எனவும் அறிவித்தது.
தேர்தல் ஆணையம் விசாரணை
வரும் 17ம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. இன்னும் பத்து நாட்களே இருப்பதால் 'எந்தச் சூழலிலும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான ஒரு நிலையை ஆணையம் எடுத்துவிடக் கூடாது' என்ற பதற்றத்தில் இருக்கிறார். தேர்தல் வெற்றியைவிடவும், தேர்தல் ஆணையத்தின் விசாரணைதான் அவரை வாட்டி வதைக்கிறது" என்றார் ஒரு அதிமுக நிர்வாகி.
சவால்கள்
கட்சி சின்னத்தை மீட்பதும் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் தற்போது தினகரன் முன்னிறுக்கும் சவால்கள். ஏப்ரல் 17-ம் தேதி நடக்கும் விசாரணைக்காக
காத்திருக்கிறார்கள் அ.தி.மு.கவினர்.