ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இடமாற்றம்
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது. புதிய போலீஸ் கமிஷனராக கரன்சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற திமுக புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. புதிய போலீஸ் கமிஷனராக கரன்சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி பிறப்பித்தது. அறிவிப்பு செய்த அன்றே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கடந்த முறை பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்ததால் மாற்றப்பட்டார்.
கமிஷனர் ஜார்ஜ் இந்த முறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் அப்போது எழுந்தன. இதனால், இப்போதும், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார். எனவே அவரை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற முடிவு செய்துள்ளதால், புதிய போலீஸ் கமிஷனரை நியமிப்பதற்காக 3 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அவரும், தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள கரன்சின்ஹா(சிபிசிஐடி), அசுதோஷ் சுக்லா(மதுவிலக்கு), திரிபாதி(சட்டம் ஓழுங்கு) ஆகியோரது பெயர்களை அனுப்பினார். அசுதோஷ் சுக்லா, கரன்சின்கா ஆகியோரில் யாரை நியமிப்பது என்று ஆலோசனை நடத்தினர். அசுதோஷ் சுக்லா கடந்த பொதுத் தேர்தலின்போது ஜார்ஜ் மாற்றப்பட்ட பிறகு, போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர். இவர்களில் ஓருவர்தான் போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கரன்சின்ஹா புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனிடையே போலீஸ் கமிஷனர் ஜார்ஜை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. ஜார்ஜுக்கு புதிய பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் புகாரை ஏற்று முதலில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி மாற்றப்பட்டு பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டார். இப்போது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.