ஓட்டுப்போட வந்தா “பளார்” இலவசம் – வாக்காளரை அறைந்த தேர்தல் அதிகாரி
மணப்பாறை: நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நிறைவடைந்திருந்தாலும் ஆங்காங்கு சில குண்டுகள் வெடிக்கத்தான் செய்துள்ளன.
அதிலும், கரூர் அருகே உள்ள மணப்பாறை தொகுதியில் வாக்காளர் ஒருவரை தேர்தல் அதிகாரி ஒருவர் அறைந்த சம்பவம் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டசபை தொகுதி, கோவில்பட்டி ரோட்டில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில், 99 ஆம் எண் ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் வர தாமதமானதால், 30 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
மற்றொரு மையத்தில், 92 ஆவது ஓட்டுச்சாவடியில், நாகஜோதி என்ற பெண் ஓட்டளிக்க வந்தார். அப்போது, கூட்டமாக நுழைந்த மூத்த குடிமக்களுடன் இந்த பெண்ணும் நுழைந்ததால், ஆத்திரமடைந்த மண்டல அலுவலர் ரேணுகாதேவி, "உனக்கு அறிவு இல்லை. இப்படி நுழையிற" என்று, அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணுக்கு ஆதரவாக பிற வாக்காளர்கள் திரண்டு வந்து, ரேணுகா தேவியை கண்டித்தனர்.இதனால், நாகஜோதியிடம் அவர் மன்னிப்புக்கேட்டார். இதையடுத்து, அங்கு சகஜநிலைமை திரும்பியது.