பணப்பட்டுவாடா புகார்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் மே 23-க்கு ஒத்திவைப்பு- தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தமிழகத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் வாக்காளர்களுக்கு பெருமளவு பணத்தை வாரி இறைத்ததாக எழுந்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் ஒரு சட்டசபை தொகுதியில் தேர்தலையே ஒத்திவைப்பது என்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications