தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: 565 வாக்குகள் பெற்று கலைப்புலி தாணு வெற்றி
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 565 வாக்குகள் பெற்று தலைவராக கலைப்புலி தாணு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று தேர்தல் நடைபெற்றது.
ஓட்டுப்போட தகுதி உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 967 பேர். இவர்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர்அலிகான் உட்பட 5 பேர் போட்டியிட்டனர்.
ஓட்டுப்பதிவு சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடைபெற்றது. 4 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் மொத்தம் 776 வாக்குகள் பதிவானது. அதில் 565 வாக்குகள் பெற்று கலைப்புலி தாணு வெற்றி பெற்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார். இந்த தேர்தலையொட்டி கந்தசாமி நாயுடு கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.