ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெ.வுக்காக போலீஸ் அதிகாரி பிரசாரம்- நடவடிக்கை எடுக்க கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி கணேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில், விதிமுறைகளுக்கு மாறாக என்னென்ன முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று வார ஏடுகளில் வந்த செய்திகளையெல்லாம் தொகுத்து சில நாட்களுக்கு முன்னால் நான் விரிவாக வெளியிட்டிருந்தேன்.
அந்தச் செய்திகளை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில்தான் பா.ம.க. நிறுவனரின் அறிக்கையும் உள்ளது. குறிப்பாக "சேலம் மாநகரக் காவல் துறையின் மேற்கு சரகக் குற்றப் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர், காலில் அடிபட்டதாகக் கூறி கடந்த பத்து நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார்.
வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ள அவர் தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அ.தி.மு.க.வினருடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அரசு ஊழியரான இவர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி, ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க. நிர்வாகியாகவே மாறி பரப்புரை செய்கிறார்" என்று அவரது அறிக்கையில் தெரிவித் திருக்கிறார்.
அந்த அதிகாரி வெள்ளை சட்டை அணிந்து ஆர்.கே. நகர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும், அவருடைய புகைப்படம் "முரசொலி" நாளிதழிலேயே வெளிவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதுபற்றி விசாரித்தறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலர்களுக்கான நடத்தை விதிமுறைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.