கரெண்ட் என்ன வீட்டில் சுடும் இட்லியா? கேட்கிறார் கரூர் மா.செ. விஜயபாஸ்கர்
கரூர்: கரெண்ட் என்ன வீட்டில் சுடும் இட்லியா ? என்று மிகப்பெரிய அறிவாளி போல கேட்டுள்ளார் அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர். ஏற்கனவே மின்தட்டுப்பாடு பற்றி பேசிய நத்தம் விஸ்வநாதன் கரண்டு பெட்டிக்குள் கை விடச் சொன்னார். ஆனால், அதிமுக மாவட்ட செயலாளரோ இட்லியா என்று கேட்டுள்ளார்.
அ.தி.மு.க வின் 44 வது தொடக்க விழா நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட செயலாளராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்ட பின்னர் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க வின் ஓவ்வொரு நிகழ்ச்சியும் களை கட்டத்தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டம், தாந்தோன்றி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விஜயபாஸ்கர், மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மின்சாரம் கேள்விக்குறியானது, ஆனால் அம்மாவின் ஆட்சியில் தற்போது மின்மிகை மாநிலமாக அந்தஸ்து பெற்றுள்ளது என்றார்.
தி.மு.க கட்சியினர் சொல்கிறார்கள் கரெண்ட் கட் என, கரெண்ட் என்ன வீட்டில் சுடும் இட்லியா ? என கேள்வி கேட்டார். அவர்களுக்கு என்ன தெரியும் உலக அளவில் அம்மா அவர்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். ஆனால் எதிர்கட்சியான மைனாரிட்டி தி.மு.க ஏளனம் செய்தது. அந்த கூட்டத்தை அவர்களே அனைத்து தொலைக்காட்சிகள் வழியாக கண்டு வியப்படைந்தனர். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு அதுவாகும்.
மைனாரிட்டி தி.மு.க ஆட்சியும் ஒரு மாநாடு நடத்தியது. அது தான் தமிழர்களை ஏமாற்றி, தமிழை வியாபாரமாக ஆக்கிய செம்மொழி மாநாடு எனப்படுவது. அந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர் யார் தெரியுமா ? குஷ்பு அதை இந்த பொது கூட்டத்தில் மக்கள் மத்தியில் சொல்ல விரும்பவில்லை. குஷ்பு ஏன் மைனாரிட்டி தி.மு.க வை விட்டு விலகினார். என்ன சக்கலாத்தி சண்டையா அதை நான் இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் முன்னாள் பகிரங்கமாக சொல்ல முடிய வில்லை, ஏனென்றால் அந்த அளவிற்கு செம்மொழி மாநாட்டை நடத்தி தமிழை வியாபாரமாக்கியதோடு அரசின் வரிப்பணத்தை வீணாக்கியதோடு, அந்த பணத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தியவர் கருணாநிதி, நமது தமிழ் மொழியை வியாபாரமாக்கியவர் கருணாநிதி என்றார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் முதன்முதலாக எம்.எல்.ஏ வாக ஆகியதோடு, சட்டசபைக்கு செல்லுவதும், அங்கே அவர்கள் பேசுவதும், நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலாக ஆவதும், அங்கு அவர் பேசுவதும் கன்னிப்பேச்சு என்றால், முதன் முதலாக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று மேடையில் பேசும் எங்கள் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கரின் பேச்சும் கன்னிப்பேச்சுதானே என்கின்றனர். அ.தி.மு.க வினர். செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட பின்னர் விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் திமுக தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.