திருப்பூரில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளர்கள் இருவர் பரிதாப பலி!
திருப்பூரில் கட்டிட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் கட்டிட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கட்டிட பணி முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இதில் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜாமணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணமூர்த்தி அளவுகோலை கொண்டு மாடியில் அளவிடும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்திலிருந்து சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது மோதினார்.
இதில் கிருஷ்ணமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அருகில் வேலைபார்த்து கொண்டிருந்த ராஜாமணி அதிர்ச்சியடைந்து, கிருஷ்ணமூர்த்தியை இழுத்து காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட தொழிலாளிகள் பனியின் போது மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.