ராயக்கோட்டை: 5 அடி பள்ளத்தில் விழுந்த 2 மாத குட்டியானை.. பத்திரமாக மீட்டு தாயிடம் சேர்ப்பு
ராயக்கோட்டை அருகே பள்ளத்தில் விழுந்த 2 மாத குட்டி யானை பத்திரமாக மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே இன்று பள்ளத்தில் விழுந்த 2 மாத குட்டியானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள நாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் பைப் லைன் பதிப்பதற்காக சுமார் 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு தாய் யானை உள்பட 2 யானைகள், 2 மாதமே ஆன 1 குட்டி யானையுடன் அவ்வழியாக வந்துகொண்டிருந்தது. தாய் யானை முன்னே நடுந்து சென்றது. நடுவில் குட்டி யானையும், அதன் பின்னே மற்றொரு யானையும் நடந்து சென்றது.
யானைகள் ஊருக்குள் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டனர். இதனால் குட்டி யானை உட்பட 3 யானைகள் அருகிலுள்ள போடூர் பள்ளம் காட்டு பகுதியை நோக்கி பிளிறிக்கொண்டு மிரண்டு ஓடியது.
இதில் தாய் யானையும், மற்றொரு யானையும் வேகமாக ஓடி போடூர்பள்ளம் காட்டு பகுதிக்குள் சென்று விட்டன. ஆனால் 2 மாதமே ஆன குட்டியானையால் வேகமாக ஓட முடியாமல் தடுமாறி, அருகில் பைப்லைன் போடுவதற்காக தோண்டப்பட்ட 4 அடி பள்ளத்தில் தவறி மல்லாந்த நிலையில் விழுந்தது.
மல்லாந்த நிலையில் விழுந்ததால், எவ்வளவு போராடியும் குட்டி யானையால் வெளியே ஏறி வர முடியவில்லை.
பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை காயமின்றி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் கயிறு கட்டி இழுக்கப்பட்டு குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். பின்னர், குட்டி யானையை அதன் தாய் யானை சென்ற போடூர் பள்ளம் காட்டுப்பகுதியை நோக்கி வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
பள்ளத்திலிருந்து மீண்ட குட்டியானையோ துள்ளி குதித்தபடி தாயை தேடி போடூர் பள்ளம் காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்றது.












Click it and Unblock the Notifications