நீலகிரியில் பெண் யானை மர்ம மரணம்: மின் வேலியில் சிக்கியதா?
நீலகிரி: கூடலூரை அடுத்து உள்ள நெலாக்கோட்டையில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அது மின் வேலியில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நெலாக்கோட்டை மேசீல்ட் தனியார் தேயிலை தோட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
யானையின் உடலை பார்த்த பொதுமக்கள் உடனே இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் யானை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என்றனர் வனத்துறையினர். இந்நிலையில் யானை மின் வேலியில் சிக்கி பலியாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.