கொடைக்கானலில் யானை தாக்கி பெண் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் யானை தாக்கியதில் பிச்சையம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்துள்ள பேத்துப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி பிச்சையம்மாள் (57). அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்வதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது அந்த தோட்டத்தையொட்டி வனப் பகுதியிலிருந்து வந்த காட்டு யானை, பிச்சையம்மாளை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காட்டு யானை நடமாட்டம் இருப்பதை தெரிவித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திரண்ட பொதுமக்கள் கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த பிச்சையம்மாளின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மின்வேலி அமைத்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பை நிலவியது.