பிரிய மனமில்லையே!... கோவில் திரும்பும் யானைகள்!!
கோவை: மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. யானைகள் பிரியாவிடைக்கு தயாராகிவருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகள் இயற்கையான சூழல் இல்லாமல் அவதிப்பட்டுவந்தது. இதனால், ஆண்டுக்கு ஒருமுறை இயற்கையான சூழலில் ஓய்வு அளித்து புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் முகாம்கள் நடத்தவேண்டுமென்று மறைந்த பிரபல யானைகள் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அதிமுக அரசு ஆண்டுதோறும் கோவில் யானைகள் உட்பட தெப்பக்காடு, டாப்சிலிப்பில் முகாம்களில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கும் புத்துணர்வு முகாம்களை நடத்திவருகிறது.

புத்துணர்வு முகாம்
கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பாக கோவில் யானைகளுக்கான் புத்துணர்வு முகாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ந்தேதி துவங்கியது, இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருக்கோயில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான யானைகள் இந்த முகாமில் பங்கேற்றன.

ருக்கு, தெய்வானை, வள்ளி
தஞ்சை மாவட்ட திருவையாறு - தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான தர்மாம்பாள் யானை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 4ஆயிரத்து 700 கிலோ எடைக் கொண்ட ருக்கு, திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான 17 வயது பெண் யானை தெய்வானை, இலஞ்சி குமாரர் கோயில் யானை வள்ளி உள்ளிட்ட 30 யானைகளும் இந்த முகாமில் பங்கேற்றன.

சிறப்பு யானைகள்
தினமும் பவானியாற்றில் இருவேளை குளியல், இல்லையெனில் ஷவர்பாத்தில் உற்சாக குளியல் போட்டன யானைகள். தினமும் 5 கி.மீட்டர் நடை பயிற்சி, பசுந்தீவன உணவு, ஆரோக்கியத்தை காக்க மருந்துகள் போன்றவை வழங்கப்பட்டன. யானைகளுக்கு அதன் எடை, வயதின் அடிப்படையில் தீவனம் கொடுக்கப்படும். முகாமில் பங்கேற்கும் ஒரு யானைக்கு சராசரியாக ரூ.2 லட்சம் செலவழிக்கப்பட்டது.

காட்டுயானைகளுக்கு தனி முகாம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 26 யானைகளும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 22 யானைகளுக்கும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 3 யானைகளுக்கும், சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள 1 யானை, கோவை மாவட்டம் சாடிவயல் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த 1 யானை என மொத்தமுள்ள 53 யானைகளுக்கு தனியாக புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

நிறைவு விழா
இந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இன்று மாலை நிறைவு விழா நடத்தபட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யானைகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வனப்பகுதியில்
கோயிலில் கான்கிரீட் தரையில் நின்றும், பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்தும் அலுத்துப்போன இந்த யானைகள், ஆற்றங்கரையோரம், வனத்தையொட்டிய பகுதியில் நடைபெற்ற இந்த முகாமில், ஜில்லென்று இயற்கை சூழலில் உற்சாகமாய் சுற்றி வந்தன. முகாம் முடிவடைந்து விட்டதால் யானைகள் மீண்டும் கோவிலுக்கு திரும்ப தயாராகி வருகின்றன.

பிரிய மனமில்லையே
யானைகளை ஏற்றிச் செல்வதற்காக அந்தந்த பகுதிகளில் இருந்து லாரிகள் வந்து தயாராக உள்ளன. ஆனால், முகாமிற்கு வந்த யானைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று பிரிந்து செல்ல மனமில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

டாப்சிலிப்பில்
இந்த ஆண்டு டாப்சிலிப்பில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கடந்த டிசம்பர் 11ம் தேதி துவங்கியது. கலீம், 48, ராமு,44, உட்பட 12 ஆண் யானைகளும், விஜய லட்சுமி,61, சிவகாமி,62, உட்பட 10 பெண் யானைகளும் என மொத்தம் 22 யானைகள் முகாமில் பங்கேற்றன. இந்த புத்துணர்வு முகாம் இன்றுடன் செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது.

யானைச்சவாரி
யானைகள் புத்துணர்வு முகாம் செவ்வாய்கிழமை முடிவடைவதால், புதன்கிழமை(28ம் தேதி) சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications