For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழத்தகுதியில்லா நகரமாகிறதா சென்னை? வருடா வருடம் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன? எச்சரிக்கை ரிப்போர்ட்

அநியாயங்களை தட்டிக்கேட்க யாராவது தேவதூதன் வரும்வரை சென்னையும் இப்படித்தான் இருக்கும்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

    சென்னை: சென்னையில் வருடா வருடம் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து மக்கள் ஒருவருக்கொருவர் கவலையோடு பேச ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் மழைக்காலங்களில் சென்னை வசிக்கத் தக்க நகரமாக இருக்காதோ என்பதே அவர்கள் அச்சம்.

    இது ஏதோ சென்னை மட்டுமே சந்திக்கும் பிரச்சினை இல்லை. கன மழையை எதிர்கொள்ளும் அனைத்து பெருநகரங்களுமே இப்பாதிப்பை சந்திக்கின்றன.

    பொருளாதார தலைநகர் மும்பை, ஐடி தலைநகரம் பெங்களூர், பிரதமரின் சொந்த மாநில பெருநகரம் அகமதாபாத் ஆகியவை கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள்.

    பெருநகரங்கள் மட்டும் ஏன்?

    பெருநகரங்கள் மட்டும் ஏன்?

    ஏன் பெருநகரங்கள் மட்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன? மீடியாக்களின் கவரேஜ் என்பதை தாண்டி மற்றொரு முக்கிய காரணம், முறையற்ற கட்டுமானங்கள்.
    சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கான அறிக்கையை உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையில், ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளே, சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கான முக்கியக் காரணம் என்று தெரிவித்திருந்தது.

    பரிந்துரைத்த அறிக்கை

    பரிந்துரைத்த அறிக்கை

    அந்த நிலைக்குழு தனது பரிந்துரையில், வணிக நோக்கங்களுக்காகக் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெரும் கட்டிடங்களை அப்படியே நிறுத்தி அகற்றவும் மாநில அரசுக்கு வலியுறுத்தியது. ஆனால் நடந்தது என்ன?
    சென்னையின் சில ஆற்றோரங்களில் வீடின்றி தற்காலிக ஷெட்கள் அமைத்து தங்கியிருந்த ஏழை, எளிய மக்களை அதிகாரிகளை அனுப்பி வெளியேற்றியது அரசு. ரியல் எஸ்டேட் பெரும் முதலைகளுக்கு எந்த தடையும் இல்லை.

    அரசுக்கே அக்கறை இல்லை

    அரசுக்கே அக்கறை இல்லை


    இதைவிட மற்றொரு கொடுமை, சென்னையிலுள்ள சிற்றோடை ஓர பகுதிகளை அரசே கையகப்படுத்தி வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதுதான்.
    மத்திய அரசின் காமராஜர் துறைமுக நிறுவனம், எண்ணூர் சிற்றோடையின் பல நூறு ஏக்கர் பரப்பை கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அமைக்க அனுமதி பெற்றுள்ளது இதற்கு ஒரு உதாரணம். கொசஸ்தலையாறு நதியும் எண்ணூர் சிற்றோடையும் பாதுகாக்கப்படும் அளவுக்கு சென்னை வெள்ள சேதத்தில் தப்பிக்கும். ஆனால் இன்று ஆக்கிரமிப்புகள் காரணமாக கொசஸ்தலையாற்றில் செயற்கையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதைத்தான் வட சென்னைக்கு ஆபத்து என எச்சரித்த கமல் நேரில் சென்று ஆய்வு செய்து அரசு ஓரளவுக்கு பணிகளை தொடங்க வித்திட்டார்.

    ஏரிகள் சுருங்கின

    ஏரிகள் சுருங்கின

    அறிவியல் மையம் தகவல்படி சென்னையில் 1980ம் ஆண்டு வாக்கில் 600 ஏரி, குளங்கள் இருந்தன. இப்போது அவற்றில் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. 1130 ஹெக்டேர் பரப்பளவில் 19 பெரிய ஏரிகள் இருந்தன. அவை தற்போது 649 ஹெக்டேராக சுருங்கி உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் எல்லைகள் நாளுக்கு நாள் சுருக்கிக்கொண்டே செல்கிறது. ஒருபக்கம் ஆக்கிரமிப்புகள், மறுபக்கம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

    சென்னை ஏரிகள்

    சென்னை ஏரிகள்

    வேளச்சேரி ஏரி, நங்கநல்லுார் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, உள்ளகரம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, திரிசூலம் ஏரி, மீனம்பாக்கம் ஏரி, மூவரசம்பட்டு ஏரி, மடிப்பாக்கம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி, அஸ்தினாபுரம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி உட்பட 30க்கும் மேற்பட்ட ஏரிகளை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    கால்வாய் ஆக்கிரமிப்பு

    கால்வாய் ஆக்கிரமிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தால் அதிலிருந்து வரும் தண்ணீர் போரூர் ஏரிக்குப் போக வேண்டும். ஆனால் அதற்கான கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரி தூர்வாரப்படவில்லை. அங்குள்ள சதுப்பு நிலம் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. வீட்டு மனைகளாக்கி விட்டனர். ஏரிகளை விட மிக மிக முக்கியமானது அவற்றின் கால்வாய்கள்தான். காரணம், ஏரி நிரம்பும்போது அதன் உபரி நீர் இந்த கால்வாய்கள் மூலமாகத்தான் அடுத்தடுத்த ஏரிகளுக்கு போக முடியும். அவை கிட்டத்தட்ட முழு அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

    கிடைத்த வரை சுருட்டுவார்கள்

    கிடைத்த வரை சுருட்டுவார்கள்

    சென்னையில் ஒரு சதுர அடி விலை என்ன என்பது உங்களுக்கே தெரியும். எனவே கிடைத்த அளவுக்கு நிலத்தை கையகப்படுத்தி பல கோடி சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பேராசை பெரிய மனிதர்கள், அதிகாரிகளின் நோக்கம். நகரமெங்கும் கான்க்ரீட் அதிகரித்துள்ளதால் பெய்யும் மழை நிலத்தடிக்குள் செல்ல முடியவில்லை. வெள்ளம் அதிகரிக்க இதுவும் காரணமாகிறது. அநியாயங்களை தட்டிக்கேட்க யாராவது தேவதூதன் வரும்வரை சென்னையும் இப்படித்தான் இருக்கும்.

    English summary
    Encroachment of ponds are the real reason for Chennai floods, Panel report highlights.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X