காமராஜர் துறைமுகமானது எண்ணூர் துறைமுகம்: 9 அடி உயர சிலை நிறுவ முடிவு – ஜி.கே.வாசன்
சென்னை: எண்ணூர் துறைமுகத்துக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பெயர் சூட்டினார்.
எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை நடந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் பெயர் பலகையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ‘ரிமோட்' மூலம் திறந்து வைத்து எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயரை சூட்டினார்.
அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் காமராஜர் புகழ் ஓங்குக என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
அரசியலில் எல்லோரும் போற்றும் ஒரு மாபெரும் தலைவராக பெருந்தலைவர் காமராஜர் திகழ்ந்தார். இங்கே இந்த நிகழ்ச்சி மாநாடு போல் நடக்கிறது.
எண்ணூர் துறைமுகம் மிகச் சிறப்பாக செயல்படும் துறைமுகங்களில் ஒன்று. இங்கு எற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எண்ணூர் துறைமுகத்தில் நிறைய வணிகம் நடை பெறுகிறது.
இந்த துறைமுகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட அனுமதி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காமராஜரின் புகழ்
காமராஜர் ஒரு சகாப்தம். கல்விக் கண் திறந்த கருணைக் கடவுள். இந்திய வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தை வகித்தவர். இந்திய விடுதலை போராட்ட தியாகியும் ஆவார்.
தமிழகத்தில் 9 ஆண்டு நிலையான ஆட்சியை நடத்தி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றினார். இன்றைக்கும் அவரது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று அனைவரும் பெருமையுடன் சொல்லிக் கொண்டு உள்ளனர்.
தமிழகத்தின் வளர்ச்சி
காமராஜரின் ஆட்சியில் தமிழகம் முன் மாநிலமாக திகழ்ந்தது. தொழில், விவசாய துறையில் முன்னிலை வகித்தது. காமராஜர் இந்திய நாட்டின் ‘கிங்மேக்கர்' ஆக திகழ்ந்தார்.
மதிய உணவுத் திட்டம்
பள்ளி மாணவ-மாணவிகளுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அந்த திட்டம் இன்று பல வடிவங்களில் பரிமாணம் பெற்று சிறப்பாக செயல்படுகிறது. 12 கோடி மாணவர்கள் மதிய உணவு திட்டத்தினால் பயன் அடைந்து வருகிறார்கள்.
காமராஜர் பற்றி கண்காட்சி
ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பு பெற பல திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். காமராஜரின் புகழை வெளிப்படுத்துகின்ற பல அரிய புகைப்படங்களை சேகரித்து இங்கே புகைப் படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதை எல்லோரும் பார்வையிட வேண்டும்.
காமராஜர் பெயரை எண்ணூர் துறைமுகத்துக்கு சூட்டியது 100க்கு 100 சதவீதம் பொருத்தமானது. காமராஜ் புகழ் ஓங்குக. அவரது பெருமை பரவட்டும் என்றார்.
9 அடி சிலை நிறுவப்படும்
கூட்டத்தில் துறைமுக பொறுப்பு கழக அதிகாரி அதுல்ய மிஸ்ரா வரவேற்று பேசினார். அப்போது பெருந்தலைவர் காமராஜருக்கு எண்ணூர் துறைமுக வளாகத்தில் 9 அடி உயர வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளதாகவும் 1 வாரத்தில் இந்த அமைக்கப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.
விழாவில் காங்கிரஸ் கட்சியினரும், நாடார் சங்கத்தினரும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
இரண்டாவது துறைமுகம்
மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்ற உடன், முதலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டது. தற்போது எண்ணூர் துறைமுகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.