திருவாரூர் அருகே மூதாட்டி கொலை.. கைதான அதிமுக ஐடி விங் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கைதான அதிமுக ஐடி விங் மாவட்ட நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வெட்டிக்காடு எனும் ஊரைச் சேர்ந்த மூதாட்டி முத்துலட்சுமி. இவருக்கு வயது 85. கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பாபு. இவர் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய தாய் மலர்க்கொடி.

ஆடுகளைக் தோட்டத்தில் கட்டுவது தொடர்பாக மலர்க்கொடிக்கும், மூதாட்டி முத்துலட்சுமிக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமி மூதாட்டியை அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த முத்துலெட்சுமி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து, மன்னார்குடி காவல்துறையினர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாயார் மலர்க்கொடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்த் பாபுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவின் தாயார் மலர்க்கொடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆடு கட்டும் பிரச்சனையில் மூதாட்டியை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைதான அதிமுக ஐடி விங் மாவட்ட நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சி. ஆனந்தபாபு, (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications