நாங்க கூப்பிட்டுட்டுத்தான் இருக்கோம், அவங்கதான் வர மாட்டேங்குறாங்க.. சி.வி. சண்முகம்
இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தைக்கு அதிமுக அம்மா அணி தயாராக இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வரவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஒன்றுபட்டு செயல்படலாம் என்று முடிவு செய்து இரண்டு கோஷ்டிகள் சார்பிலும் கடந்த வாரம் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் 24ம் தேதியே இரு அணிகளும் கூடிப் பேசி இணைப்பு முயற்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் இரு தரப்பு அதிகாரப்பூர்வமாக நேரில் சந்தித்து பேசியதாக எந்தத் தகவலுமே இல்லை. பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது, விரைவில் பேச்சுவார்த்தை என்று கூறியவர்கள், இனி பேச்சுவார்த்தையே இல்லை என்பது போல நேற்றைய மே தின விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு அமைந்திருந்தது.
இக்கட்டான சூழலில் அதிமுக உள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்மும் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார். எங்கள் அணி சார்பில் பேச்சுவார்த்தைக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி வரவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திற்கும், பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், அவ்வளவு தான் என்றும் திட்டவட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications