ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்: காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
ஈரோட்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டன.
ஈரோடு: குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது.
அதனால் இந்த குடியிருப்புவாசிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் பெரும்பள்ளம் ஓடை, குளத்துப்பண்ணை, அசோகபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 256 நபர்களுக்கு முத்தம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் படி 21 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வீடியோ கான்பரைசிங் முறையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஈரோட்டில் ஆட்சியர் பிரபாகர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். 256 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்நோக்கு அறை,படுக்கை அறை,சமையல் அறை,குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.