1 ரூபாயாக இருந்தாலும், 1 கோடியாக இருந்தாலும் ஊழல் ஊழல்தான்… கருணாநிதி
சென்னை: வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடியாக இருந்தாலும் ஊழல் ஊழல்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கேள்வி பதில் வடிவில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது....
நீதிபதி குமாரசாமி அவர்கள், ஜெயலலிதா தரப்பினர் வங்கியிலே வாங்கிய கடன்கள் பத்து கோடி ரூபாயை, 24 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு, 8 சதவிகிதம் தான் அவர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களின் மதிப்பு என்று கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.

கடன்களின் கூட்டுத் தொகை 10 கோடி ரூபாய்தான் என்று சரியாகக் கூறியிருந்தால், ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து 76 சதவிகிதம் என்பதைப் புரிந்து கொண்டு தண்டனை கொடுத்திருப்பார்.
மேலும் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில், ஆந்திர மாநில அரசு, 13-2-1989 அன்று வெளியிட்ட ஒரு உத்தரவில் 20 சதவிகிதம் வரை வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை அரசு அலுவலர் ஒருவர் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது என்பதை தனது வாதத்திற்கு உதவியாக நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, ஆந்திர மாநில அரசைப் போல தமிழக அரசு அப்படி ஏதாவது ஒரு உத்தரவை எப்போதாவது பிறப்பித்திருக்கிறதா என்பது முக்கியமல்லவா. அப்படியென்றால் எந்தத் தேதியில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? ஆந்திர மாநில அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு அந்த மாநில அரசு அலுவலர்களுக்குத் தானே பொருந்தும்? அது எவ்வாறு தமிழ்நாட்டு அலுவலர்களுக்குப் பொருந்தும்?.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குவித்த சொத்துக்களின் மதிப்பு பத்து சதவிகிதத்திற்கும் குறைவு என்பதால் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி வழங்கியிருக்கும் தீர்ப்பு, 1977ஆம் ஆண்டில் இருந்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
1977 ஆம் ஆண்டின் சட்டம், 1988ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது திருத்தம் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்து விட்டது என்றும், ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தில் இந்த 10 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் சொத்துக் குவிப்பு இருந்தால், அதனை அலட்சியப் படுத்தி விடலாம் என்று எந்தக் குறிப்பும் இல்லை என்றும் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு என்பது 8 சதவிகிதம் அல்ல, 76 சதவிகிதம் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் சொல்லியிருக்கும் புள்ளி விவரங்களே தெரிவிப்பதாகவும், இதற்கெல்லாம் பதில் என்ன என்பது உச்ச நீதிமன்றத்திலேதான் தெரிய வரும்.
எந்த ஆண்டில் லஞ்சம் பெற்றிருந்தாலும், எந்தச் சட்டத்தின்படி அது குற்றம் என்றாலும், வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும்; லஞ்சம் லஞ்சம்தான் - ஊழல் ஊழல்தான்! என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications