ஸ்டெர்லைட்டால் பாதிப்பு.. குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதில் மாத்திரை கொடுக்கிறோம்.. பெண்கள் கதறல்
Recommended Video
தூத்துக்குடி: எல்லோரும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பார்கள், நாங்கள் மாத்திரைகளை கொடுக்கிறோம் என்று கண்ணீர் சிந்துகிறார்கள், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி சுற்றுவட்டார பெண்கள்.
தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியார்புரம் பகுதியில் ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகை காரணமாக, சுற்றுவட்டாரத்திலுள்ள, கிராம மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த அனுமதி கிடைத்துள்ளதாக கிடைத்த தகவலால் தூத்துக்குடி மக்கள் கொதித்தெழுந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியிறுத்தி, மாவட்ட கலெக்டர் அ்லுவலகத்தை இன்று திரளான பெண்களும், ஆண்களும் முற்றுகையிட்டனர்.
4 வயது குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண் கூறுகையில், இந்த குழந்தை என்ன பாவம்ங்க பண்ணிச்சி. எல்லாரும் பொறந்த குழந்தைங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பாங்க. எங்க ஊர்ல பிறந்த குழந்தைகளுக்கும் மாத்திரை தாங்க கொடுக்கிறோம். சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை, தண்ணீரில் கழிவு கலந்துவிட்டது. இவையெல்லாம்தான், இந்த நிலைக்கு காரணம் என்றார்.
இன்னொரு பெண்மணி கூறுகையில், எங்கள் ஊரில், கை, கால் பாதிப்பு, சுவாச பாதிப்பு உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். எனது தாயை இந்த ஆலையால் இழந்துவிட்டேன். இப்போது எனது பச்சிளம் குழந்தையையும் இழக்க நான் தயாராக இல்லை என்றார்.
மற்றொரு பெண்மணி தனது 2 வயது குழந்தையை நிருபர்களிடம் காண்பித்து, இவனது நிலையை நீங்களே பாருங்கள். ஐசியூவில் அவ்வப்போது அட்மிட் செய்து சிகிச்சையளிக்கும் நிலையில் இந்த குழந்தை உள்ளது. எங்கள் ஊரில் இருந்து யார், குழந்தைகளுடன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போனாலே போதும். டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், என்ன பிரச்சினை என்று தெரிந்துவிடும். எங்களை ஆஸ்பத்திரியில் எளக்காரமாத்தான் பார்ப்பாங்க, என்றார்.
இன்னொரு நடுத்தர வயது பெண்மணி அளித்த பேட்டியில், எங்கள் பிரச்சினைகளுக்காக நீண்ட காலம் போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், எங்கள் ஊரில் வந்து இருந்து பார்க்கட்டும். இந்த காற்றை சுவாசித்து பார்க்கட்டும். உங்களுக்கும் பிள்ளை, குட்டிகள் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசாதீங்கய்யா, என்றார் தழுதழுத்த குரலில்.
சில பெண்களோ, இனியும் எங்கள் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கும் என நம்பிக்கையில்லை. 2 லட்சம் பேர் கூடி தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியும் கலெக்டர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, மக்கள் மீதே பொய் வழக்குகளை போடுகிறார்கள். எங்களை காப்பாற்ற மாணவர்களால் மட்டும்தான் முடியும். மாணவ செல்வங்கள் எங்களுக்காக வீதிக்கு வந்தால், அரசு பணிந்து, நடவடிக்கை எடுத்தே தீரும், என்றார்கள் ஆவேசமாக.